JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 07, 2016

Thiruppaavai 22



விளக்க உரை: திரு யாதவன் நம்பி அவர்கள். 
நன்றி: புதுவை வேலு அவர்களே. 

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,  இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன்,
உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.
அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

எங்கள் மீது,  கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,  தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்க மாட்டாயா?

கிண்கிணி என்பது அரைச் சதங்கை. பாதி மூடியும் பாதி பாகம் திறந்ததாகவும் செய்யப்படும் ஓர் ஆபரணம். அதைப் போல், தாமரை மலர் பாதி குவிந்தும், பாதி திறந்ததுமாக இருந்ததாம்! கண்ணனும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்தானே! அதுவும் ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.

சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!