JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 24, 2012

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய




Courtesy:
http://bhakthi.wordpress.com/2007/12/24/

இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.

இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.

இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.

அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?

சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?

அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .

இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.

இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.