வியாழன், ஜனவரி 14, 2016
வெள்ளி, ஜனவரி 08, 2016
வியாழன், ஜனவரி 07, 2016
Thiruppaavai 22
விளக்க உரை: திரு யாதவன் நம்பி அவர்கள்.
நன்றி: புதுவை வேலு அவர்களே.
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன்,
உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.
அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.
எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்க மாட்டாயா?
கிண்கிணி என்பது அரைச் சதங்கை. பாதி மூடியும் பாதி பாகம் திறந்ததாகவும் செய்யப்படும் ஓர் ஆபரணம். அதைப் போல், தாமரை மலர் பாதி குவிந்தும், பாதி திறந்ததுமாக இருந்ததாம்! கண்ணனும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்தானே! அதுவும் ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரையின் நிலை அதுதானாம். இந்த ஒப்புமையை கண்ணபிரானின் திருக்கண்களுக்குக் காட்டுகிறார் ஸ்ரீஆண்டாள்.
சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
புதன், ஜனவரி 06, 2016
திருப்பாவை 21
எனது நண்பர் தமிழ் வலை உலக ஆன்மீக பதிவாளர் திரு ஜி. ரா. அவர்கள் அளிக்கும் விளக்க உரை இது காண்க: நன்றி: ஜி. ரா. அவர்களே:
”மணிவண்ணா!
கோகுலத்தில் உன் வீடு எப்படிப்பட்டது தெரியுமா? பல் கறப்பதற்காக ஒரு கலம்
வைத்து ஒரு பீய்ச்சு பீச்சினால் மறுகலனும் நிறைந்தொழுகும் அளவு பால்
சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கூட்டம் நிறைந்தவன் வீடு. அந்தப்
பசுக்கூட்டங்களைக் கொண்ட நந்தகோபனுடைய மகனே உறக்கம் தெளிவாய்!”
கோதை பாடும் பொழுது கண்ணனுக்குப் பொய்க்கோவம். கண்களைத் திறக்காமலே அவள் மனதோடு ஊடல் செய்தான்.
“ஓ!
அப்படியா! இதே அளவு பசுக்கூட்டங்கள் இன்னொரு வீட்டில் இருந்தால், அந்த
வீட்டிலும் ஒரு கண்ணன் இருப்பானோ? இவ்வளவுதான் கண்ணனின் பெருமையோ?”
ஒரு
நொடி பதறி சிறிது உயிரும் சிதறி அரண்டாள் ஆண்டாள். மறுநொடியே தெளிந்தாள்.
படுக்கையில் கிடக்கும் கண்ணனை மறந்தாள். நெஞ்சில் நிறைந்தவனை நினைந்தாள்.
உள்ளத்தில் பெருஞ்சுடர் வடிவாக நின்றான் கண்ணன். அந்தச் சுடரிடம்
வேண்டினாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
”அடியவரைக் காப்பதில் பெருமை உடையவனே! பெரியவனே! உலகில் காணும் காட்சியெல்லாமாக நின்று அகத்தில் சுடராக இருப்பவனே!
துயில் எழுவாய்! தவறானவர்கள் தங்கள் தவறுகளை உன் அருளால் திருத்திக்
கொண்டு உன்னையே வந்து பணிவது போல உன்னைப் போற்றி நாங்களும்
வந்திருக்கிறோம். உன்னைப் புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் காதால் கேட்டு
மனத்தால் அருளமாட்டாயா!”
செவ்வாய், ஜனவரி 05, 2016
முப்பத்து முக்கோடி (திருப்பாவை 20 )
முப்பத்து மூவர்
அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும்
கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும்
விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச்
செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்!
திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும்
தந்துன் மணாளனை
அமரர்கள் முப்பத்து முக்கோடியர். அவர்களுக்கெல்லாம் தலைவனே! அமரர்க்கு அச்சம் அண்டினால் அதை அருகிருந்து அழிப்பவனே! அரங்கனே! அச்சுதனே! அமலனே! துயில் எழுவாய்! இப்படி அடியார் படும் துயரமெல்லாம் நிலத்தோடு நிலம் செய்யும் நீ நேர்மையும் திறமையும் உடையவன்! தீயோரின் ஆணவத்தை அழிக்கின்ற விமலனே துயில் எழுவாய்!”
இளவெயினி
மனதில் ஒரு எண்ணம். “கோதை, முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த வீட்டின்
முற்றத்துக்கு வந்துதானே கண்ணனிடம் உதவி கேட்டிருக்க முடியும். அத்தனை
தேவருக்கு இந்த ஒரு முற்றம் போதாது அல்லவா.”
“அழகாகக் சொன்னாய் வெயினி. முற்றும் வினை நீக்கும் முற்றம் இதில் முற்றுமாய்த் தேவர் நிற்க இடமில்லாமல் போகலாம். ஆனால் காக்கும் மாலவன் நெஞ்சில் எல்லோருக்கும் இடம் உண்டு. இருந்த இடத்திலிருந்தே அவன் பெயர் சொன்னால் போதுமே. துயரெல்லாம் தீருமே.”
மாலவன் இல்லம் என்பது தத்தமது உள்ளம் என்று இளவெயினியோடு மற்றவர்களுக்கும் தெளிந்தது. அடுத்து நப்பின்னையை எழுப்பினாள் கோதை.
“உன்னைப் போல் அழகியும் உண்டோ! பொற்கலச மென்முலைகள். கோவைக்கனிச் செவ்வாய். குறுகும் சிற்றிடை. இப்படி கண்ணனே கிறங்கிக் கிடக்கும் எழிலே! நப்பின்னை நங்கையே! செல்வமே! துயில் எழுவாய்!
நீயும்
எழுந்து உன் மணாளனையும் துயிலெழுப்புவாய். அவனுக்கு விசிறி வீசி கண்ணாடி
காட்டி அழகூட்டி எங்களுக்கும் காட்டுவாய்! அவன் அருளில் எங்களையும் நீராடா
வைப்பாய்!”
நன்றி : ஜி. ரா அவர்களே.
ஞாயிறு, ஜனவரி 03, 2016
Thiruppaavai 18
தனது வலைத் தளத்திலே திரு யாதவன் நம்பி அவர்கள் சொல்லும் வியாக்யானம்.
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராகசுவாமிசன்னதிக்கு போகக்
கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்.
வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார்.
அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும்.
இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...
அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்!
அதனால், கண்ணனின் மனைவி "நப்பின்னை"யை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
சனி, ஜனவரி 02, 2016
திருப்பாவை 17 வது பாசுரம்.
எனது வலைத் தள நண்பர் திரு ஜி ரா அவர்கள் தனது தளத்திலே தந்து இருக்கும் விளக்க உரை இதுவாம்.
நன்றி: திரு ஜி.ரா . அவர்களே.
எனது வலைத் தள நண்பர் திரு ஜி ரா அவர்கள் தனது தளத்திலே தந்து இருக்கும் விளக்க உரை இதுவாம்.
நன்றி: திரு ஜி.ரா . அவர்களே.
வாயிற்காவலர்கள் கதவைத் திறந்து வழிவிட்டதும் நந்தகோபரின் பெரிய வீட்டுக்குள் மற்ற ஆயர்சிறுமியரோடு நுழைந்தாள் கோதை.
வீடோ பெரிய வீடு. ஒவ்வொரு பக்கமும் அறைகள். திக்குத் திசை தெரியாமல் எந்த அறைக்கதவைத் தட்டுவது என்று குழப்பம். முற்றத்தில் இருந்தே ஒவ்வொருவரையாக எழுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறாள் ஆண்டாள்.
எடுத்தவுடன் அவர்கள் கண்ணனை எழுப்பவில்லை. நந்தகோபனையும் யசோதையையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.
”உடை நீர் உணவு தந்து எங்களைக் காப்பாற்றுகின்ற எம்பெருமானே நந்தகோபனே எழுந்திராய். இளங்கொம்பு போன்ற ஆயர்குலத்துப் பெண்களில் எல்லாம் முதன்மையானவளே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே அசோதையே எழுந்திராய்”
நந்தகோபனோ அசோதையோ எழுந்து வருவதாகத் தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்து கண்ணனைத் துயிலெழுப்புகிறாள். மனக்கண்ணில் கார்மேனியன் தூங்கும் அழகை நினைத்துப் பார்க்கிறாள். ஒரு காலை மடக்கிப் படுத்திருந்த நிலை அவன் உலகு அளந்ததை நினைவு படுத்துகிறது.
“வானத்தை ஊடுருவிச் செல்லுமாறு காலை ஓங்கி உலகு அளந்த பெரியவனே! இன்னும் உறக்கமா? எழுந்திரு.”
அப்போதுதான் கண்ணனுக்கும் மூத்தவனான பலதேவனின் நினைப்பு வருகிறது. அவரும் உறங்கிக்கொண்டுதானே இருப்பார். அவரையும் துயிலெழுப்ப வேண்டுமே. வரிசை மாறிவிட்டதே என்று வருந்திக்கொண்டே பலதேவனைப் பள்ளியெழுப்பினாள் கோதை.
“மின்னும் செம்பொன்னால் செய்த வீரக்கழல்களைக் காலில் அணிந்துள்ள பலதேவா, நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்குவதா? நாங்கள் எழுப்புவதைக் கேட்டு மனமிரங்கி எழுந்திருங்கள்.”
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் - எங்களுக்கு உடை நீர் சோறு தந்து தருமம் செய்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் - எம்பெருமானாகிய நந்தகோபனே எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே - இளங்கொம்பைப் போன்று மென்மையான பெண்களில் எல்லாம் சிறந்தவளே, குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் - எம்பெருமாட்டியாகிய யசோதையே உணர்வு தெளிந்து உறக்கம் நீங்குவாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த - உலகுக்கு ஆடையாக விளங்கும் வானத்தை ஊடாக அறுத்து காலோங்கி உலகை அளந்தவனே
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் - மேலுலகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவனே! உறக்கத்தை விட்டு எழுந்திருப்பாய்!
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா - செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்திருக்கின்ற செல்வனே! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் - நீயும் உன் தம்பியும் இன்னும் உறங்கலாமா! எங்கள் அழைப்பைக் கேட்டு இதயத்திலிருந்து கருணை காட்டுங்கள்.